நீ எப்படி எப்பவுமே சிரிச்சுட்டே இருக்க? என்னைப் பார்க்கும் பலர் என்னிடம் கேட்கும் கேள்வி. இன்னும் பல பேர் இதே கேள்வியை என்னிடம் கேட்காமல் மனதில் கூட நினைத்திருக்கக் கூடும். இன்னும் சில பேர் என்னிடம் கேட்கும் கேள்வி "உனக்கு வாழ்கையில எந்தக் கவலையுமே இல்லையா?" என்பது. இந்த கேள்விகள் எனக்கு மிகவும் விசித்திரமானதாகப்படுகிறது. இன்னும் சொல்லப் போனால் இந்த கேள்வி கேட்பவர்கள் விசித்திரமானவர்களாகத் தெரிகிறார்கள். ஏன் வாழ்வில் கவலையே இல்லை என்றால் தான் சிரிக்க வேண்டும் என்று எதாவது சட்டம் உள்ளதா? இன்னும் சொல்லப் போனால் வாழ்க்கையில் பெரிய கவலை உள்ளவர்கள் தான் நிறைய சிரிக்க வேண்டும்.அது முழுமையாக கவலையை நீக்காவிடினும் கவலையின் தாக்கத்தை குறைக்க உதவும். அதுசரி மனதில் பெரிய கவலை இருக்கும் போது எப்படி சிரிக்க முடியும் என்று கேட்கிறீர்களா?
கவலை பெரிதோ சிறிதோ எதுவாகினும் நாம் எடுத்துக் கொள்ளும் விதத்தில் தானே இருக்கிறது. ஏன் இன்னும் சொல்லப் போனால் கவலையையே கவலையாகப் பார்க்காமல் அனுபவமாகப் பார்ப்பவர்கள் எத்தனை பேர் உள்ளனர்.விரல் விட்டு எண்ணி விடலாமா? ஆனால்
இந்தப் பார்வை வாழ்க்கைக்கு மிகவும் அவசியம். நாம் வாழும் வாழ்க்கை எல்லாமே நிறைந்தது. அதை அனுபவிக்கத்தான் நாம் உள்ளோம். இங்கே வாழ்கையை அனுபவித்தல் என்பது வெறும் இன்பத்தை மட்டுமே குறிக்காது. இந்தத் தெளிவு இருந்தால் நாம் கவலையை சுலபமாக கடந்து விடலாம்.
நாம் கடக்கும் அனுபவம் மனதிற்கு மகிழ்ச்சியை அளிக்குமேயனால் அந்த அனுபவத்தை நினைவில் கொள்ளலாம். பின்னாளில் நாம் அதை நினைவுகூறும் போது மனதிற்கு இன்னுமொரு மகிழ்ச்சியான தருணத்தை உருவாக்கும். அதே அனுபவம் நமக்கு கசப்பானதாக இருக்குமேயானால் அதிலிருந்து வரும் பாடத்தை மட்டும் கற்றுக் கொண்டு சம்பவத்தை மறந்து விட வேண்டும். இந்தப் பாடம் மனதில் இருக்கும் வரை நாம் மீண்டும் அந்த மாதிரி ஒரு கசப்பான அனுபவத்தை சந்திக்க நேராது. சரி மகிழ்ச்சியாக இருப்பதற்கு என்னென்ன செய்யலாம்.
- எப்பவுமே ஜாலியா இருக்கறவங்க கூட பழகுங்க. Tention party கள், சிடு மூஞ்சி சின்னப்பாக்கள விட்டு கொஞ்சம் தள்ளியே இருங்க. ஏனா அந்த மாதிரி ஆளுங்க அவங்களும் சந்தோஷமா இருக்க மாட்டாங்க. நம்ம சிரிச்சு சந்தோஷமா இருந்தாலும் விடமாட்டாங்க.
- நண்பர்கள் யாராவது மொக்க ஜோக் அடித்தாலும் பலமாக சிரிக்கலாம். இப்படி சிரிக்கரதுனால உங்களுக்கும் நல்லது. ஜோக் சொல்றவங்களும் சந்தோஷப்படுவாங்க.
- ஒவ்வொரு தடவையும் மனதிற்கு எதாவது கவலை ஏற்பட்டு மனது வருத்தம் படும் போது ,"இந்த விஷயம் நம்ம மகிழ்ச்சியைக் கெடுக்குது இதப் பத்தி இனி நம்ம think பண்ணக் கூடாது" என்று நினைத்து கொள்ளுங்கள். இதை படிக்கும் போது இதெல்லாம் அப்பத் தோணாது, இது over feelings ஆ இருக்கு என்று நினைப்பவர்கள் ஒரு முறை இதை செய்து பார்த்தால் பலனை அறியலாம்.
- அலுவலகத்தில் பணி புரியும் சக ஊழியர்கள், அண்டை வீட்டார் , அல்லது தெரிந்தவர்கள் யாரேனும் எதிர்ப்பட்டால் சிநேகமாக சிரிக்கலாம். நாம் ஒவ்வொரு முறையும் சிரிக்கும் போது நமக்குள் மன அழுத்தத்தை குறைக்கும் harmone சுரக்கிறது என எங்கேயோ படித்த ஞாபகம். (இப்டி சிரிக்கரதுனால இதனோட அருமை தெரியாத சிலர் உங்கள Loosuனு கூட நினைக்கலாம் ஜாக்கிரதையா handle பண்ணுங்க)
- மறதி- நான் முன்பே குறிப்பிட்டவாறு மனதிற்கு கவலை அளிக்கக் கூடிய எதையும் எப்போதும் நினைவுக் கூறாதீர்கள். நினைவுக் கூறாமல் இருந்தாலே நாளடைவில் அது மறந்து விடும்.
- இறந்த காலத்தில் நடந்ததை நினைத்து வருத்தப்பட வேண்டாம். நம்ம வருங்காலம் எப்படி இருக்குமோனு நினைச்சு கவலைப் படவும் வேண்டாம். இந்த இரண்டுமே உங்களுடைய நிகழ்கால மகிழ்ச்சிக்கான எதிரிகள்.
- எனக்கு மட்டும் ஏன் கடவுள் இவ்ளோ கஷ்டத்த தர்ரானு நினைக்காதிங்க. அதிக திறன் உள்ள குதிரையின் மேல் தான் அதிக சுமை வைப்பார்களாம். அதனால கவலையை விட்டுவிட்டு அதைத் தாங்கி நிற்கின்ற உங்கள் மன வலிமையை நினைத்து பெருமிதம் கொள்ளுங்கள்.
இவையனைத்தும் நான் எப்போதுமே சிரித்துக் கொண்டே இருப்பதற்கான காரணங்கள். :) பிடித்திருந்தால் நீங்களும் கடைப்பிடிக்கலாமே!
பி. கு : உங்கள் சிரிப்பு மற்றவர்களை புண்படுத்தாதபடி பார்த்துக் கொள்வது மிக அவசியம்.